சேலம் உத்தமசோழபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் பூசாரி சுப்பிரமணி (65) பூஜைகளை முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவத்தன்று, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவில் வளாகத்தில் நின்று கொண்டிருந்ததாகவும், பூசாரி தண்ணீர் எடுக்கச் சென்ற நேரத்தில் கருவறைக்குள் புகுந்து அம்மனின் தங்க சங்கிலியை திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடிய நபருடன் மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் காத்திருந்து தப்பிச் சென்றதும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பூசாரி சுப்பிரமணி கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், ஓமலூர் பூமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (42) மற்றும் ராமன் (42) ஆகிய இருவர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.