மகாராஷ்டிராவின் நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நிடா கான், சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் மதின் படேலின் சட்டவிரோத கட்டிடம் நேற்று மாநகராட்சி ஊழியர்களால் இடித்து தள்ளப்பட்டது.
முன்னதாக, டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும், மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் நிடா கான் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அவரது பங்கு விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிடா கான், கடந்த மே 7ஆம் தேதி சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்னர் அவுரங்கபாத்) கைது செய்யப்பட்டார். அவரை மதின் படேல் என்பவர் தனது வீட்டில் தங்க வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் மதின் படேலின் கட்டிடம், சத்ரபதி சம்பாஜி நகரின் நரேகான் பகுதியில் அமைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அதிரடியாக இந்த கட்டிடத்தை இடித்து தள்ளினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் முன்னாள் எம்.பி. இம்டியாஸ் ஜலீல் பேசுகையில், 'நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு வாரம் அவகாசம் கோரியிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதை அவசரமாக செய்துள்ளனர். இருப்பினும், மதின் படேலுக்காக நாடு வியக்கும் வகையில் ஒரு புதிய வீட்டை நாங்கள் கட்டித் தருவோம்' என்று தெரிவித்தார்.