இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்பு சிறப்புப்படை, சிங்கப் பெண் சிறப்புப்படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர், இளைஞர், மாணவர் அமைப்புகளும் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்தன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை.
அதேநேரம், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் செயல்படும் எஃப் எல் 2 மதுபானக் கடைகள் உள்ளிட்ட மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து அரசின் நடவடிக்கை என்ன என்பது அரசாணையில் தெளிவுபடுத்தப்படவில்லை. அவைகளும் மூடப்பட்டால் மட்டுமே அரசின் நோக்கம் முழுமையடையும். இந்த மதுபானக் கடைகள் மூடப்படுவதோடு, அரசு படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் திசையில் செயல்பட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்படும்போது கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனை தலைதூக்காமல் தடுக்க அரசு விழிப்புணர்வுடன் செயல்பட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல, குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும்.
மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் சுமார் 3500 டாஸ்மாக் பணியாளர்களின் வேலைவாய்ப்பையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தக் கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக, அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் அவர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.