சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் கார் மூழ்கியதில் வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (73), ராதா (63) ஆகியோர்தான் உயிரிழந்த தம்பதி ஆவர்.
நேற்று முன்தினம் இரவு ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி, ஏனாதி கிராமம் வழியாகச் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வெங்கடாசலம், ராதா ஆகியோர் காரில் சென்றபோது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் காரை கடக்க முயன்றனர். அப்போது, கார் மழைநீரில் மூழ்கி லாக் ஆனதால், தம்பதியினர் வெளியேற முடியாமல் உயிரிழந்தனர்.
மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், சுரங்கப்பாதையில் கார் மூழ்கியிருப்பதைக் கண்டு ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை வெளியே எடுத்தபோது, தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் நீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றுவதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஓடையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் கார்த்திக் (6) உயிரிழந்த சோக சம்பவமும் நிகழ்ந்துள்ளது.