ஐபிஎல் 2026 சீசனின் 61-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. இதில் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக 73 ரன்கள் குவித்து அசத்தினார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.
பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தது. கோலி 37 பந்துகளில் 58 ரன்களும், படிக்கல் 25 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர், 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 222 ஆக உயர்த்தினார். பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் ப்ரார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 19 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. பின்னர் கூப்பர் கானொலி 37 ரன்களும், சூர்யான்ஷ் ஷெட்கே 35 ரன்களும் எடுத்தனர்.
அதிரடி வீரர் சஷாங்க் சிங் 27 பந்துகளில் 56 ரன்கள் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசி வெற்றிக்கு கடுமையாகப் போராடினார். அவருக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் 37 ரன்களுடன் ஆதரவளித்தார். இருப்பினும், பெங்களூரு அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ரசிக் சலாம் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, ப்ளே-ஆஃப் சுற்றுக்கான தனது வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஆட்டநாயகனாக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியின் தோல்வி பஞ்சாப் அணியின் ப்ளே-ஆஃப் கனவைச் சிக்கலாக்கியுள்ளது.