தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்ற நிலையில், அமைச்சரவைக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இலாகா ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் விஷால் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து முதல்-அமைச்சரின் முடிவுகளில் தலையிட வேண்டாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "முதல்-அமைச்சர் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், நமது பிரச்சினைகள் அவருக்குத் தெரியும் என்றும், அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். தயவுசெய்து அவரது முடிவுகளை மதித்து, மாற்றத்திற்காக காத்திருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது முதல்-அமைச்சரின் முடிவுகளுக்கு ஆதரவாக அவர் தெரிவித்த கருத்து என கருதப்படுகிறது.