ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மூன்றாம் வரிசையில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அந்த இடத்தை பிடிக்க இரண்டு வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்புகளின் தொடக்கமாக அமைகிறது. இதனால், ரசிகர்களிடையே இப்போட்டி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடைசியாக ஜனவரி 2026க்கு பிறகு இந்திய அணி 50 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில், முழு பலத்துடன் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இந்திய அணி தயாராகி வருகிறது. 2026 ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த விராட் கோலிக்கு பல வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இளம் அதிரடி பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது ஆடும் லெவன் அணியில் விராட் கோலி வழக்கமாக விளையாடும் 3வது இடத்தில் யாரை களமிறக்குவது என்பதில் அணி நிர்வாகத்திற்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி 57 சராசரியுடன் 171 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அடிப்படையில் ஒரு தொடக்க வீரர். ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியதால் தொடக்க வீரருக்கான இடம் காலியாக இல்லை. மேலும், ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் 3வது இடத்தில் பேட்டிங் செய்த அனுபவம் இல்லாதவர்.
இந்த சூழ்நிலையில், அந்த 3வது இடத்திற்கு ஜெய்ஸ்வாலுக்கு முக்கிய போட்டியாளராக அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன் உருவெடுத்துள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், தான் விளையாடிய 28 ஒருநாள் போட்டிகளில் 4 முறை 3வது இடத்தில் களமிறங்கி விளையாடியுள்ளார். கடைசியாக 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடிய இஷான் கிஷன், இதுவரை 27 இன்னிங்ஸ்களில் விளையாடி 1 சதம் மற்றும் 7 அரைசதங்கள் உட்பட 933 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 210 ரன்கள் ஆகும். இவரது பேட்டிங் சராசரி 42.40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 102.19 என சிறந்த நிலையிலேயே உள்ளது. இதனால், 3வது இடத்தில் களமிறங்க யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பது தற்போது சற்று கடினமாகவே பார்க்கப்படுகிறது. கோலியின் இடத்தை நிரப்பப் போவது யார் மற்றும் அணியின் பந்துவீச்சு கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்பது போன்ற பல சிக்கலான கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.