பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னையில் நேற்று மாலை துpurple துயர சம்பவத்தில் உயிரிழந்தார். அடையாறு மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கே.ராஜன், 'பிரம்மச்சாரிகள்' (1983) படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 'டபுள்ஸ்', 'அவள் பாவம்', 'நினைக்காத நாளில்லை' போன்ற பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். இவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி, 'நம்ம ஊரு மாரியம்மா', 'உணர்ச்சிகள்' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். மேலும், 'சொந்தக்காரன்', 'உளவுத்துறை', 'கபடி கபடி', 'வீட்டோட மாப்பிள்ளை', 'கிரிவலம்', 'ஆதிக்கம்', 'சாரி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு', 'பாம்பு சட்டை', 'துணிவு', 'பகாசுரன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கே.ராஜன், ஓரிரு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் துணைத்தலைவராகவும், செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். சினிமா மற்றும் அரசியல் தவிர, சமூக நலன் சார்ந்த பல அமைப்புகளையும் நிறுவி சிறப்பாக நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று மாலை தனது கார் டிரைவருடன் அடையாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அடையாறு மேம்பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய கே.ராஜன், சிறிது தூரம் நடந்து சென்று திடீரென மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது இந்த திடீர் முடிவு திரையுலகினரை மட்டுமின்றி, ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கே.ராஜனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
