டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இந்தப் படுதோல்விக்குப் பிறகு, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் தனது வீரர்களின் ஆட்டத்திறனை கடுமையாக விமர்சித்துள்ளார். 'இப்படி ஒரு கேவலமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நாங்கள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவே தகுதியற்றவர்கள்' என்று அவர் ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வெற்றி கட்டாயம் என்ற நிலையில் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால், ஃபீல்டிங்கில் அவர்கள் செய்த படுமோசமான தவறுகளால் வெற்றியைத் தாரை வார்த்தனர். குறிப்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது, முதல் ஓவரிலேயே கே எல் ராகுல் கொடுத்த மிக எளிமையான கேட்ச்சை யாஷ் ராஜ் புஞ்சா கோட்டைவிட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ராகுல் அதிரடியாக விளையாடி, அபிஷேக் போரெல் உடன் இணைந்து 10 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். மைதானத்தில் வீரர்கள் பந்துகளைத் தடுக்கத் தவறியதைக் கண்டு, பயிற்சியாளர் குமார் சங்கக்காரா டக்-அவுட்டில் இருந்தபடியே கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் பேசிய ரியான் பராக், 'இது மிகவும் மோசமான செயல்பாடு. நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தால், இன்று விளையாடியதை விடச் சிறப்பாக விளையாட வேண்டும். கடந்த 4, 5 போட்டிகளில் நாங்கள் காட்டிய ஆட்டத்தை விட நாங்கள் சிறந்த அணிதான். ஆனால், இதேபோல் தொடர்ந்து விளையாடினால் நாங்கள் டாப்-4 இடத்திற்குத் தகுதி பெறவே தகுதியற்றவர்கள்' என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது 14 ஓவர்கள் முடிவில் 160 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், மிட்செல் ஸ்டார்க், லுங்கி நிகிடி ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.
ராஜஸ்தான் அணி தற்போது 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.027 ஆகக் குறைவாக இருப்பதால், அடுத்த 2 போட்டிகளில் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராகப் பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் கனவு நனவாகும். இந்தத் தோல்வி ராஜஸ்தான் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது.