இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் கட்டணத்தில் வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் புதிய கட்டண விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பின்படி, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், 'தட்கல்' கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் சான்றிதழ் அல்லது சரண்டர் சான்றிதழுக்கான கட்டணமும் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு சலுகையாக, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது சாதாரண கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, மாற்று பாஸ்போர்ட்டுக்கான கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் 5,000 ரூபாயும், தட்கல் முறையில் 7,500 ரூபாயும், 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் 6,000 ரூபாயும், தட்கல் முறையில் 8,500 ரூபாயும் வசூலிக்கப்படும்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்குச் சாதாரண முறையில் 1,750 ரூபாயும், தட்கல் முறையில் 4250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் பிரிவில், பாஸ்போர்ட் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ மாற்றுப் பாஸ்போர்ட் பெறச் சாதாரண கட்டணமாக 4,250 ரூபாயும், தட்கல் கட்டணமாக 6,750 ரூபாயும் செலுத்த வேண்டும். இது தவிர, போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஒப்படைப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கு ரூபாய் 750ம், அடையாளச் சான்றிதழுக்குச் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.