நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து, டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. நீட் மறுதேர்வு முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும்.

மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை (நீட்) சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால், தேசிய தேர்வு முகமை ஏற்கனவே மே 3-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்தது.

இந்நிலையில், நீட் மறுதேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் தடுக்க, மத்திய அரசு பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் இணையதள வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே, நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version