யாரையும் நம்பிச் செல்ல வேண்டாம் என பாஜக தொண்டர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணாமலை ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாகவும், அதில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அடிப்படை தொண்டர்கள் பலர் இணைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பிரதமர் மோடியின் ஆசியுடனும், இது ஒரு இயக்கம் என்றும் கூறி அவர்களை மூளைச்சலவை செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்களின் ஆசி எந்தவொரு தனிப்பட்ட இயக்கத்திற்கும் கிடையாது என்றும், பாஜக 'தேசம், இந்த நாடு' என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் கட்சி என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜகவில் இருந்து பலர் வெளியேறி மீண்டும் கட்சியில் இணைந்த வரலாறு உண்டு என்றும், ஆனால் இதுவரை யாரும் கட்சியை விட்டு வெளியேறி தனி இயக்கம் நடத்தியதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த அவர், யாரையும் நம்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், எந்தவொரு இயக்கத்திற்கும் எந்தத் தலைவரின் ஆசியும் கிடையாது என்றும் வலியுறுத்தினார். இயக்கத்தில் இருப்பவர்கள் பாஜக தொண்டர்களாக இருக்க முடியாது என்றும், பாஜகவில் இருப்பவர்கள் மட்டுமே இங்கு இருக்க முடியும் என்றும், வேறு எந்த அமைப்புகளிலும் இருக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பாஜகவுக்கு இதுவரை எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்றும், பாஜக உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படியே தமிழக பாஜக இயங்கிக் கொண்டிருப்பதாகவும், ஒரு கட்சியில் இருந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பிறகு அவர்கள் மீது எப்படி ஆசி இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.