புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன், திருவள்ளூர் சிறுவாபுரி முருகன், சென்னை கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, திருவாரூர் எண்கண் முருகன், நாகப்பட்டினம் திருவிடைக்கழி சுப்பிரமணியர், சுவாமிமலை முருகன், ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியர், தென்காசி இலஞ்சி குமாரசுவாமி, கடலூர் சேத்தியாத்தோப்பு பாலமுருகன் என பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், ஆன்மிக பலம் அதிகரிக்கவும் புதுக்கோட்டை விராலிமலை முருகனை வழிபடலாம். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் திருவள்ளூர் சிறுவாபுரி முருகனை வழிபட்டால் வீடு கட்டும் கனவு நனவாகும், விரைவில் திருமணம் நடைபெறும். சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமியை வணங்கினால் கடன் தொல்லைகள் தீரும், கஷ்டங்கள் விலகி இனிய வாழ்வு அமையும்.
ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தன்று திருவாரூர் எண்கண் முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் கண் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். நாகப்பட்டினம் திருவிடைக்கழி சுப்பிரமணியரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும், நினைத்த காரியம் நிறைவேறும். சுவாமிமலை முருகனை வழிபட்டால் கல்வி, ஞானம், கலைகளில் சிறந்து விளங்கலாம்.
செவ்வாய் தோஷம் நீங்க ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியர் திருக்கோவிலில் வந்து வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கி நற்பலன் கிடைக்கும். தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சி குமாரசுவாமியை தொடர்ந்து மூன்று வளர்பிறை சஷ்டி திதிகளில் பதினோரு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு பேச்சு குறைபாடு இருந்தால், கடலூர் சேத்தியாத்தோப்பில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு தேனும், தினை மாவும் வைத்து பூஜை செய்து, அவற்றை அருட்பிரசாதமாக அந்த குழந்தைகள் சாப்பிட்டால் நாளடைவில் பேச்சுத் திறன் வருவதாக கூறப்படுகிறது.