கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. தேவஸ்தான தகவல்களின்படி, நேற்று முன்தினம் 97,561 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், 57,780 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகள் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அன்னதானக் கூடம், பூங்காக்கள், நான்கு மாட வீதிகள், நாராயணகிரி தோட்டம், கடை வீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் நடமாட்டமே அதிகமாக இருந்தது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் இருந்து பாதகங்கையம்மன் கோவில் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 18 மணிநேரம் முதல் 24 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 98,058 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 49,234 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4.09 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், ரூ.4.20 லட்சத்திற்கு லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அலிபிரி டோல்கேட்டில் தீவிர வாகனச் சோதனை நடைபெறுவதால், திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் ஆன்மிகப் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வர வேண்டும் என்றும், தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.