தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.), இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்து, 'எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்க ஆதரவு அளிக்கிறேன்' என்று தெரிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.காமராஜ், தினகரனிடம் கடிதம் அளித்தார். அந்தக் கடிதத்தை டி.டி.வி. தினகரன் ஆளுநரைச் சந்தித்து வழங்கினார்.
கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். 'அ.ம.மு.க. எம்.எல்.ஏ.வின் ஆதரவு எங்களுக்கு உள்ளது' என்று தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், 'அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜைக் காணவில்லை. அவர் விலை போயிருக்கலாம். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது' என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ், மக்கள் மாளிகைக்குச் சென்றார். அங்கு டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது டி.டி.வி. தினகரன் பேசுகையில், 'ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதத்திற்கும் காமராஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தக் கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் ஆளுநருக்கு வாட்ஸ்அப் வழியாக ஒரு போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
'ஒரே ஒரு கடித நகலைக் கொடுத்து எங்கள் எம்.எல்.ஏ.வை இழுக்கப் பார்த்திருக்கிறார்கள். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா?' என்று தமிழக வெற்றிக்கழகத்திற்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தச் சூழ்நிலையில், இன்று காலை சட்டமன்றம் கூடியபோது, அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் அவையில் பேசுகையில், 'தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன்' என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி. தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். கட்சியின் குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்ட காரணத்திற்காக அவர் நீக்கப்படுகிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
