தமிழ்நாட்டில் மதுபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய வசதிக்காக, டாஸ்மாக் நிறுவனம் https://tasmace2e.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை இன்று முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகைகளைக் கண்டறியலாம். மொத்தம் உள்ள 4048 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் எந்தெந்த மதுபானங்கள் கையிருப்பில் உள்ளன, அவற்றின் விலை என்ன போன்ற விவரங்களை அறிந்து முன்பதிவு செய்யவும் முடியும்.
ஆன்லைனில் மதுபானங்களை முன்பதிவு செய்து பணம் செலுத்திய பிறகு, வாடிக்கையாளர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய ரசீது வழங்கப்படும். இந்த ரசீதைக் கொண்டு, அவர்கள் எந்தக் கடைக்கு மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்தக் கடைக்குச் சென்று மதுபாட்டில்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், முன்பதிவு செய்த கடைக்குச் செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஆன்லைன் முன்பதிவு முறையின் முக்கிய சாதகமான அம்சம் என்னவென்றால், டாஸ்மாக் ஊழியர்கள் கமிஷன் வாங்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இனி இடமிருக்காது. ஆன்லைனில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் விலையை மட்டும் செலுத்தினால் போதும். இதனால், வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய இணையதளத்தில் நுழையும்போது, பயனர்களின் வயது மற்றும் பாலினம் கேட்கப்படும். 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்ற விதிமுறை கடுமையாகப் பின்பற்றப்படும். பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள MRP விலையை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தினால் போதுமானது.
இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 'ஸ்டாக் இல்லை' என்று கடை ஊழியர்கள் இனி கூற முடியாது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான மதுபான பிராண்டுகளை மறைத்து வைக்கும் செயல்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும். அனைத்தும் ஆன்லைனில் வெளிப்படையாகத் தெரிவதால், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
இந்த புதிய ஆன்லைன் முன்பதிவு முறையைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி, மதுபான விற்பனையில் ஒரு புதிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
