தர்மசாலா: ஐபிஎல் 2026 தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை இழந்தது. தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது இந்த சீசனின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும். போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவின்போது, அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விரக்தியும் ஏமாற்றமும் கலந்த முகத்துடன் பேசினார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, பிரியன்ஷ் ஆர்யா 33 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் உட்பட 56 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இருப்பினும், டெல்லி பந்துவீச்சாளர்கள் தங்களின் வியூகங்களை புத்திசாலித்தனமாக மாற்றி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 210/5 என்ற ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, டேவிட் மில்லர் (28 பந்துகளில் 51 ரன்கள்) மற்றும் கேப்டன் அக்சர் படேல் (30 பந்துகளில் 56 ரன்கள்) ஆகியோரின் அதிரடி அரை சதங்களால், 19 ஓவர்களிலேயே 211/7 ரன்கள் எடுத்து இலக்கை வெற்றிகரமாக எட்டியது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்தியது இதுவே முதல் முறையாகும்.
தோல்விக்கான காரணம் குறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், 'நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. மீண்டும் பீல்டிங் மற்றும் பவுலிங் என்றுதான் சொல்வேன்,' என்று கூறினார். 210 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோரா என்ற கேள்விக்கு, 'பந்து சீம் ஆகி, மாறுபட்ட பவுன்ஸ் இருந்ததைப் பார்த்தால், இது விக்கெட்டில் 30 ரன்கள் அதிகம் என்று நான் நினைக்கிறேன்,' என விளக்கமளித்தார்.
சாஹலை பந்துவீச வைக்கும் திட்டம் குறித்து அவர், 'நிச்சயமாக என் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் பந்து சீம் ஆகி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிய விதம், எங்கள் லைன் மற்றும் லெந்தை துல்லியமாக வீசியிருந்தால் விக்கெட்டுகளை எடுத்திருக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் அதைச் செய்யவில்லை,' என்று தெரிவித்தார்.
தர்மசாலா ஆடுகளத்தில் பந்துவீசும் உத்தி குறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'பிட்ச்சில் பந்தை அடித்துத்தான் வீச வேண்டும். கடினமான லெந்த், குறிப்பாக புதிய பேட்ஸ்மேன் களமிறங்கும் போது, அதுவே சிறந்த பந்து. அத்தகைய பந்துகளை மீண்டும் மீண்டும் வீசும்போது, தவறான அடிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து விக்கெட் எடுக்க முடியும். எங்களிடம் திட்டமிடல் குறைவாக இருந்தது,' என்றார்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2026 தரவரிசைப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. இதுவரை அவர்கள் 12 போட்டிகளில் ஐந்து வெற்றிகள், ஏழு தோல்விகள் என 10 புள்ளிகளுடன், -0.993 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளனர்.
இந்த தோல்விக்குப் பிறகும் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறது. ஆறு வெற்றிகள், நான்கு தோல்விகள் மற்றும் ஒரு போட்டி முடிவின்றி முடிந்த நிலையில், அவர்களின் நிகர ரன் ரேட் +0.428 ஆக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் மே 14 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத உள்ளது.