தூத்துக்குடி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் ஓர் இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு சுமார் 30 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
மேலும், காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.