சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான தோனி, லக்னோ நகருக்கு அணியுடன் பயணிக்க இருக்கிறார். ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மே 15, வெள்ளிக்கிழமை அன்று எகானா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.
இந்த ஐபிஎல் தொடரில், காயம் காரணமாக எம்.எஸ். தோனி இதுவரை ஒரு போட்டியிலும் களமிறங்கவில்லை. தொடக்கப் போட்டிகளில் அவர் பங்கேற்காத நிலையில், சீசனின் இடைப்பட்ட காலத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான வெளியூர் ஆட்டங்களுக்கு அணியுடன் பயணிக்கத் தொடங்கினார்.
ஒருபுறம், காயம் மீண்டும் மோசமடைந்ததாக கூறப்பட்டது. மறுபுறம், அணியின் வெற்றி சூத்திரத்தை மாற்ற விரும்பாததால் அவர் விளையாடவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் டெல்லியில் சிஎஸ்கே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டியிலும் அவர் அணியுடன் செல்லவில்லை. இந்தச் சூழலில், 'எம்.எஸ். தோனி நாளை லக்னோவுக்குப் பயணிக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லக்னோ செல்லும் அணியில் நிச்சயம் இருப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏற்கனவே ப்ளேஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், அவர்களை வீழ்த்துவதன் மூலம், சிஎஸ்கே முதல் நான்கு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும். காயம் காரணமாக விளையாட முடியாவிட்டாலும், எம்.எஸ். தோனி சமீபத்தில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே பயிற்சி அமர்வுகளில் கலந்துகொண்டார்.
அண்மைய நெட் பயிற்சிகளின்போது, தோனி வீரர்களுடனும், பயிற்சி ஊழியர்களுடனும் உரையாடினார். மேலும், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியதுடன், பந்துவீசும் பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஒரே ஒரு ஹோம் ஆட்டம் மட்டுமே மீதமுள்ளது. அது மே 18 திங்கட்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக நடைபெறும். அந்தப் போட்டியில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.