மின்துறையில் இனிமேல் தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் நடைமுறை தொடராது என்றும், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தப் பணிகள் சம வாய்ப்புடன் வழங்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மின்துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், மின்வாரியத்துடன் தொடர்புடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள், கொள்முதல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், 'மின்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் போர்ட்டல் மூலமாக வெளிப்படையான டெண்டர் முறை அமல்படுத்தப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். கடந்த ஆட்சியில் தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டர் வழங்கியதாக ஒப்பந்தாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அது இனி தொடராது. இந்த ஆட்சியில் இடைத் தரகர்கள், முறைகேடுகளுக்கு இடமில்லை. இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
மேலும், 'இன்னும் ஓராண்டுக்குள் மின்துறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நஷ்டங்களைக் குறைத்து, லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'கோவை சிறுமி கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். இன்னமும் அவரது தந்தையின் ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்ததால்தான் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர்' என்றார்.
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு.