தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய, 36 பேர் கொண்ட சிறப்பு ஆய்வுக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்தக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், 'நீங்கள் அனைவரும் எனது பிரதிநிதிகள், எனது காதுகள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, உண்மையான தகவல்களைக் கொண்டு வந்து என்னிடம் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
மேலும், 'கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே என்னிடம் சொல்லுங்கள். யாரையும் காப்பாற்றவோ, பழிவாங்கவோ முயற்சிக்க வேண்டாம். இரண்டு பேர் கொண்ட குழுவாகச் சென்று, கழகத்தினரை மனதாரப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளையும், தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் கொட்டித் தீர்க்கட்டும். தலைவர் மீதான குறையாக இருந்தாலும் பரவாயில்லை, அதை அறிக்கையில் பதிவு செய்யுங்கள்' என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
'நிர்வாகிகளின் உண்மையான எண்ணங்கள் என்ன என்பதை அறிவதுதான் எனது நோக்கம். டாக்டரிடம் நோயைச் சொல்வது போல, என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். அப்போதுதான் சரியான மருந்து கொடுக்க முடியும். நீங்கள் பெறும் தகவல்களை வேறு யாரிடமும் பகிரக்கூடாது. மீறினால் ஆய்வின் நோக்கமே சிதைந்துவிடும்' என கடுமையாக எச்சரித்தார்.
'பிரச்சனைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக்கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு திமுக உயிர்ப்போடு இயங்கும். உங்கள் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள் செய்யப்படும். இந்த அறிக்கை ஜூன் 5-க்குள் சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் இறுதிக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வுகளை அறிந்து வாருங்கள்!' என்று கேட்டுக்கொண்டார்.