சென்னை ஆவடி அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக, ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில், ஆவடி துணை கமிஷனர் பெரோஸ் அப்துல் கான் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆவடி ஜே.பி.எஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெருமளவில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில், அயப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் மற்றும் கோபி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.