மேகதாது அணை கட்டுவதை தடுப்பதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் நமது உரிமையை நிலைநாட்ட முடிந்தது என்றும், இது திமுக ஆட்சியில்தான் சாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் திமுக கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணை கட்டும் திட்டத்தை திமுக கடுமையாக எதிர்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அணை திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியதைக் கண்டித்து, திமுக அரசு இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
'மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சி கர்நாடகாவில் ஆட்சி புரிந்தாலும், அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அணை கட்டுவதை கடுமையாக எதிர்த்தார். திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற கருத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்தார். இது தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தித்துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பினார். திமுக அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாகத்தான் மேகதாதுவின் திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது' என அவர் விளக்கினார்.
கர்நாடகாவில் அணை கட்ட சட்டரீதியாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக ஆதரவு அளிக்கும் என்றும், ஒற்றுமையாக நின்று இதைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். முதலமைச்சரின் தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், இதற்கு திமுக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு நியாயத்தை எடுத்து வைத்து நமக்குரிய நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.