காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
'மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த அதிமுக பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 24.04.2015 அன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்தினார். அதே ஆண்டு பிரதமரை நேரில் சந்தித்தும் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, நீர் பற்றாக்குறை காலங்களில் கர்நாடகா முழு நீரையும் தடுத்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, முதலமைச்சராக இருந்தபோதும், பிரதமரை வலியுறுத்தி மேகதாது அணையை கட்டக்கூடாது என கோரிக்கை விடுத்தேன். காவிரி நீரை நாம் எப்போதும் போராடியே பெற்று வருகிறோம். காவிரி ஆற்றின் மீது நமக்குரிய உரிமையை பேணி காப்பது நம் அனைவரது கடமையாகும். அதிமுக சார்பில் முதலமைச்சர் கொண்டுவந்த இந்த தனி தீர்மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.