திமுகவின் தூண்டுதலால் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் விளைவிக்க முயற்சி நடப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதால் திமுகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். எங்கள் கூட்டணி கட்சியான விசிகவினருடன் திமுகவினர் தகராறு செய்கின்றனர். திமுகவின் தூண்டுதலால் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது" என்று கூறினார்.
மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்றும், தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கும் தவெக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மின்துறையில் 7,000 கணக்கீட்டாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 1,500 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். 4,500 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்தடையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மின்துறையில் ஊழல் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே மின்மாற்றி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அரசு வழக்கறிஞர், மாவட்ட வழக்கறிஞர் நியமனம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
