மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அன்ஷ் சமீர் சவான் (19), ரித்தேஷ் (22), ஜிதேந்திர லோகண்டே (20), ஆனந்த் ஷிங்டே (21), நிகில் (25), மகேஷ் அனில் பவார் (25), ஆதித்யா அசோக் (21), மற்றும் ராஜேஷ் அசோக் கட்கர் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் மறைவு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கார், பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.