திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, பெண் வீட்டார் தரப்பால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தநானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், மணப்பாறைக்கு வந்த தம்பதியினர், அங்கிருந்து சித்தநானந்தம் நோக்கி ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், அவர்களின் ஆட்டோவை வழிமறித்த ஒரு கார் நின்றது. அந்தக் காரில் வந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள், சித்திரை வள்ளியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து சித்திரைவள்ளியின் கணவர் அஜித்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கடத்தப்பட்ட இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரது சகோதரன் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் மீட்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
