கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் உள்ள காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் அருகே ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று இரவு இப்பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பட்டாசு தயாரித்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

இந்த கோர விபத்தில், விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மனைவி மாலதி (25) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் ஐயப்பன் (30) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்பவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்த சூரியபிரகாஷுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக சரவணன், அவரது மனைவி மாரீஸ்வரி (30), கட்டிட உரிமையாளர் குருநாதன் (65) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version