சென்னை: கடந்த மார்ச் 1, 2024 அன்று சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பொதிகை ரயிலில், மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த யேசுராஜ் (39) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட யேசுராஜ், இந்த கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியதும், இதில் பல சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசர்பாடி சாஸ்திரி நகரில் யேசுராஜின் வீடு, அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோவின் வீடு, மற்றும் பிலோமன் பிரகாஷின் வீடு ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையை ஒட்டி, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

