மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாகும். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையைக் கழிக்க லட்சக்கணக்கானோர் இங்கு வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால், குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில், பேரிஜம் வனப்பகுதியும் ஒன்று. இங்குள்ள ஏரியின் இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளைக் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால், இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், பேரிஜம் வனப்பகுதியில் நேற்று 3-க்கும் மேற்பட்ட புலிகள் நடமாட்டம் காணப்பட்டது. புலிகள் சாலையில் சுற்றித் திரிந்ததால், வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதித்துள்ளனர். மேலும், மதிக்கட்டான்சோலை, தொப்பி தூக்கி பாறை போன்ற பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புலிகளின் நடமாட்டம் கட்டுக்குள் வரும் வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை, இந்தத் தடை அமலில் இருக்கும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.