மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகம், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது சரஸ்வதி தேவி கோயில் என்று இந்துக்களும், கமல் மவுலா மசூதி என்று முஸ்லிம்களும் கூறி வந்தனர். இந்த சர்ச்சை காரணமாக, 2003 ஆம் ஆண்டு முதல், குறிப்பிட்ட நாட்களில் இரு தரப்பினரும் வழிபாடு நடத்த இந்திய தொல்லியல் துறையால் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி அடங்கிய அமர்வு நேற்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், வரலாற்று இலக்கியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய பகுதி மன்னர் போஜருடன் தொடர்புடைய ஒரு சமஸ்கிருத கற்றல் மையமான போஜ்சாலையாகவே இருந்து வந்துள்ளதை உறுதிப்படுத்தினர். மேலும், போஜர் காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இலக்கிய மற்றும் கட்டிடக்கலை குறிப்புகள், அங்கு சரஸ்வதி தேவி கோயில் இருந்ததை சுட்டிக்காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், அந்த வளாகம் சரஸ்வதி தேவி கோயில் தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலையை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மசூதி கட்டுவதற்கு வேறு நிலம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். இந்த தீர்ப்பு இந்து தரப்பினருக்கு வழிபாட்டு உரிமையை வழங்கியுள்ளதாகவும், இனிமேல் அங்கு இந்து வழிபாடு மட்டுமே நடைபெறும் என்றும் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, தார் மாவட்டத்தில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகள் அல்லது தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தார் மாவட்ட ஆட்சியர் ராஜீவ் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.