திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் கேரளாவின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சென்ட்ரல் ஸ்டேடியத்தில் காலை 10.15 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவில், 'வந்தே மாதரம்' பாடலும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.
புதிய முதல்வராக வி.டி.சதீசனுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணத்தையும், ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள், ஐயூஎம்எல் கட்சியின் 5 உறுப்பினர்கள், ஆர்எஸ்பி மற்றும் சிஎம்பி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் 14 பேர் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முக்கிய நிகழ்வில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் போன்ற முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர்.
கேரளாவின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பாஜக எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு புதிய முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.