கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வதாக தகவல் வெளியானது. இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவரை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா முதலில் மறுத்ததால், இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே. சிவக்குமார், கே.சி. வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சித்தராமையாவிடம் கோரப்பட்டதாக தகவல் வெளியானது. அவர் ராஜினாமா செய்த பிறகு, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் ஒரு சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. பெங்களூருவில் சித்தராமையாவை சந்தித்த பிறகு, அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே இதனை உறுதிப்படுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வர் சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ இல்லமான காவரியில் காலை உணவு சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி, ஹெச்.கே. பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, முதல்வர் பதவியில் இருந்து விலக இருப்பதாக சித்தராமையா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை ஆரத்தழுவி, அவரது கால்களைத் தொட்டு ஆசி பெற்றார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதால், சித்தராமையா எப்போது ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.