கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி, 'நாங்கள் அண்ணன் தம்பி போல ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டுவிட்டன. சி.வி. சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றே' என்று தெரிவித்தார்.
வாக்களித்த மக்களுக்கும், தன்னை வெற்றி பெறச் செய்ய உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த வேலுமணி, 'அதிமுக எங்களின் உயிர் மூச்சு. பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை. எப்போதுமே எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தோல்விக்கு பிறகு கட்சி செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம்' என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக ஒரு பொன்விழா கண்ட கட்சி என்றும், 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி என்றும் கூறிய அவர், சில பத்திரிகைகள் அதிமுகவை தவறாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார். 'எங்களின் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டன. அண்ணன் தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தவெக இப்போது தான் வந்துள்ளது, அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபட வேண்டும். அதிமுக பல தோல்விகளை கண்டுள்ளது, ஆனால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம். சி.வி. சண்முகத்தின் கருத்துதான் எங்கள் கருத்து, எங்கள் கருத்துதான் அவருடைய கருத்து' என அவர் கூறினார்.
முன்னதாக, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக இருவரும் கடிதம் அளித்தனர். மேலும், பழனிசாமியை சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் தேர்ந்தெடுத்ததாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். சி.வி. சண்முகம் இதில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.