நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழுகைக்காக சாலைகளைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில், சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை என்றும், மத வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். அதிக எண்ணிக்கையில் வருவோரை சமாளிக்க சுழற்சி முறையில் தொழுகை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளை மீறி சாலைகளில் தொழுகை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிரோன்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் முராதாபாத் தொகுதி எம்.பி. எஸ்.டி.ஹசன், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வழிபாடுகள் குறித்த சட்டங்கள் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும், பக்ரீத் தொடர்பான அறிவிப்புகள் இந்து சகோதரர்களின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கிலேயே வெளியிடப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முராதாபாத் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சாலைகளில் தொழுகை நடத்தப்படுவதில்லை என்றும், ஈத்கா வளாகத்திற்குள்ளேயே சுழற்சி முறையில் தொழுகை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மணி நேரம் மட்டுமே நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்துக்காக சாலைகள் பயன்பட வேண்டும் என்றும், ஆனால் மக்கள் சாலைகளிலேயே தங்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில்களைச் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுபவர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை, தங்கள் பொருட்களை சாலைகளிலேயே வைத்து பிழைப்பு நடத்துவதாகவும், அதுவே அவர்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'காவடி யாத்திரை' போன்ற நிகழ்வுகளுக்காக சாலைகள் மாதக்கணக்கில் மூடப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், சட்டங்கள் இயற்றப்பட்டால் அவை குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.