கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, 2½ ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவுக்கு கூடுதலாக 6 மாதங்கள் பதவி நீட்டிக்க அனுமதித்தது. தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஒப்பந்தப்படி தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.
இதனையடுத்து, முதல்வர் சித்தராமையாவை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம், ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், சித்தராமையாவின் மகனுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும், அவரை உரிய மரியாதையுடன் நடத்த தயாராக இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியதாகத் தெரிகிறது. ராகுல் காந்தியின் பேச்சை ஏற்றுக்கொண்ட சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்வதாக உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை, அவரது இல்லத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து, எந்தக் காரணத்தைக் கொண்டும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும், வேண்டுமானால் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை பெற்று கட்சி மேலிடத்திற்கு வழங்குகிறோம் என்றும் தெரிவித்தனர். இதற்கு சித்தராமையா மறுப்பு தெரிவித்து, கையெழுத்து இயக்கம் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும், ஏதேனும் கூற விரும்பினால் கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவிடம் கூறுமாறும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தனது வீட்டில் அனைத்து அமைச்சர்களுக்கும் சிற்றுண்டி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் முதல்வர் சித்தராமையா. இதில் தனது ராஜினாமா முடிவை அவர் அமைச்சர்களிடம் தெரிவிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.