ஹைதராபாத்: கிரிக்கெட் விளையாட்டில் ‘கேட்ச்களை நழுவவிடுவது’ என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றம். அதைத்தான் பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் செய்து, கையில் இருந்த வெற்றியைத் தாரைவார்த்துள்ளனர். தொடர் வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தற்போது வரிசையாக 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, தனது அணியின் சொதப்பல்களைப் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசி இருக்கிறார்.
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 235 ரன்களைக் குவித்தது. இந்த இமாலய ஸ்கோரை அவர்கள் எட்ட பஞ்சாப் வீரர்களே சிவப்புக் கம்பளம் விரித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இஷான் கிஷன் மற்றும் ஹென்றிச் கிளாசன் கொடுத்த 3 முக்கியமான கேட்சுகளை பஞ்சாப் வீரர்கள் கோட்டை விட்டனர். ஷஷாங்க் சிங், லோகி பெர்குசன் மற்றும் கூப்பர் கோனலி ஆகிய மூவரும் செய்த இந்தத் தவறுகள் பஞ்சாப் அணிக்கு பின்னைடைவை ஏற்படுத்தியது.
தோல்விக்குப் பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “நாங்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கேட்சுகளைப் பிடித்திருந்தால், ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 30 முதல் 40 ரன்கள் வரை தாராளமாகக் குறைத்திருக்கலாம். ஆடுகளம் மெதுவாக இருந்த அந்தச் சூழலில், இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு. பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என 3 துறைகளிலும் நாங்கள் இன்று சோபிக்கவில்லை. எப்படி ஒரு போட்டியை ஜெயிக்க வேண்டும் என்பதை ஹைதராபாத் அணி எங்களுக்கு இன்று கற்றுக் கொடுத்துவிட்டது” என விரக்தியுடன் தெரிவித்தார்.
தொடர்ச்சியான 3 தோல்விகளால் அணிக்குள் எதிர்மறையான எண்ணங்கள் பரவக்கூடாது என ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். “தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் ஒரு தேவதைக் கதையைப் போல மிகச்சிறப்பாகத் தொடங்கினோம். அந்த மனநிலை இப்போதும் அவசியம். தோல்விக்காக ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு எதிர்மறையாகப் பேசுவது நமக்கு உதவாது. இந்த இடைவேளையைப் பயன்படுத்தித் தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டும் பலமாக வருவோம்” என வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்தத் தோல்விக்கு நடுவே பஞ்சாப் அணிக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது இளம் வீரர் கூப்பர் கோனலியின் அதிரடி சதம். 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, தனி ஆளாகப் போராடி சதம் விளாசிய கூப்பர் கோனலியை ஸ்ரேயாஸ் வெகுவாகப் பாராட்டினார். “அவரது மன உறுதி அபாரமானது, நெருக்கடியான நேரங்களில் ரன் குவிக்கும் கலை அவருக்குத் தெரிந்திருக்கிறது” என்றார். மேலும், ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டியபோதும் பயமின்றிப் பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹலின் போராட்டத்தையும் அவர் பாராட்டத் தவறவில்லை. இருப்பினும், அந்த 3 கேட்சுகள் நழுவியதுதான் பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவுக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.