துர்ஹாமில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். சர்வதேச டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தை இழந்த சிறிது நேரத்திலேயே இந்த சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அபிஷேக் ஷர்மா முதல் போட்டியில் 49 ரன்கள் எடுத்தாலும், இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒன்பது முறை டக் அவுட் ஆன மோசமான சாதனையை அவர் படைத்தார். இதனால், ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலில் அவர் முதல் இடத்தை இழந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் (1 ரன்) மற்றும் இஷான் கிஷன் (0 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்சர் என விரட்டியடித்தார். பவர் பிளேவை சிறப்பாகப் பயன்படுத்தி அவர் ரன்கள் குவித்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விக்கெட்டுகள் விழுந்தாலும், சிறிதும் பயமின்றி விளையாடிய அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை வர்ணனையாளர்கள் பாராட்டினர். 20 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், 24 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 245 ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஷாம் கரண் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இருப்பினும், நடுவர் முதலில் அவுட் கொடுக்காத நிலையில், இங்கிலாந்து அணி டிஆர்எஸ் மூலம் இந்த விக்கெட்டைப் பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டை இழந்தது. இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்களை அடித்ததன் மூலம், அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100வது சிக்சரை எட்டினார். இதன் மூலம், 99 சிக்சர்களுடன் உள்ள கேஎல் ராகுலை முந்தி, அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் அடுத்த இடத்தைப் பிடித்தார். முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மா உள்ளார்.