தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் அக்கட்சியில் இணையும் மாபெரும் விழா இன்று (ஜூலை 02) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-வில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணைந்தனர். தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில், சுமார் 20,000 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக 4,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்திற்கு வெளியே பெரிய எல்இடி திரைகளும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பங்கேற்பாளர்களுக்கு தடபுடல் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள், 4 மாவட்ட செயலாளர்கள், 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நான்கு பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய கழகச் செயலாளர்கள், 15 நகரக் கழகச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் 200 பேருந்துகள் மற்றும் 400 கார்களில் சென்னை வந்து தவெக-வில் இணைய உள்ளனர். இந்த இணைப்பு விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வைரமுத்து, இளம்பை தமிழ்ச்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன், மான்ராஜ், ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தர்ராஜன் ஆகியோரும் தவெக-வில் இணைகின்றனர். இதனிடையே, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பதவியை ஏற்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது அதிமுக தலைமையை மேலும் சோர்வடையச் செய்துள்ளது.