தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன.
முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நியமனத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு ஜோதிடரை அரசுப் பதவியில் அமர்த்துவது ஏற்புடையதல்ல என்றும், இந்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வன்னி அரசு, 'ஆஸ்தான ஜோதிடர்கள்' என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. ஜனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப் பதவியில், 'ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்', 'தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்' என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குக் கருத்துகளைப் பரப்புவதையே 'தொழிலாக' கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்குச் சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான, அறிவியலுக்குப் புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சிபிஎம் மாநிலத் தலைவர் சண்முகம், 'அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளர் ரிக்கி ராதன் பண்டிட் ஒரு ஜோதிடர். இந்த நியமனம் மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.