பிரதமர் நரேந்திர மோடி தனது 6 நாள் ஐரோப்பிய பயணத்தின் தொடக்கமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார். அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 45 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
சுமார் 24 மணி நேர அமீரக பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, பொருளாதார கூட்டாண்மை மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இரு தலைவர்களும் முக்கியமாகப் பேசினர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் பழுது நீக்கும் தளம் அமைப்பது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பை அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் 3 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வழங்கும். மேலும், எரிவாயு விநியோகம் தொடர்பாக ஒரு தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் 500 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.47,500 கோடி) முதலீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.