ஓமன் நாட்டின் கடற்பரப்பில், இந்தியக் கொடியுடன் பயணித்த ஒரு வணிகக் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதன்கிழமை அன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த தாக்குதலை இந்திய அரசு வன்மையாக கண்டித்துள்ளது. வணிகக் கப்பல்கள் மற்றும் அதில் பணிபுரியும் மாலுமிகள் தொடர்ந்து குறிவைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் அனைவரும் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு இந்திய அரசு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது. இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்திற்கும், கடல்சார் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய அரசு கருதுகிறது.
வணிகக் கப்பல்களை குறிவைப்பது, அப்பாவி ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, அல்லது கப்பல் போக்குவரத்து மற்றும் வணிக சுதந்திரத்தை தடுப்பது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.