கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா அதிரடியாக விளையாடி உலக சாதனை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்திருந்தபோது களமிறங்கிய பாத்திமா சனா, எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது இன்னிங்ஸை தொடங்கினார்.
நொம்வெலோ சிபாண்டா வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 24 ரன்களை விளாசிய பாத்திமா சனா, வெறும் 14 பந்துகளில் 48 ரன்களை எட்டினார். தொடர்ந்து, கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக வேகமான அரைசதத்தை வெறும் 15 பந்துகளில் பதிவு செய்தார். இதற்கு முன் சோபி டிவைன், போப் லிட்ச்பீல்ட் மற்றும் இந்தியாவின் ரிச்சா கோஷ் ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. பாத்திமா சனா அதனை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும், பாத்திமா சனா 19 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் சாய்ரா ஜபீன் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
224 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் சாடியா இக்பால் மற்றும் நஷ்ரா சந்துவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 90 ரன்களுக்கு சுருண்டது. பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்திய கேப்டன் பாத்திமா சனா 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.