தங்கம் வாங்க இது சரியான தருணம் என நகை பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,360 குறைந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.13,000 வரை குறைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார சிக்கல்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. உலக சந்தையில் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரில் நடைபெறுவதால், கச்சா எண்ணெய் வரத்து சீரடைந்ததும், தட்டுப்பாட்டை சந்தித்த நாடுகள் அதிகளவில் கொள்முதல் செய்யத் தொடங்கியதும் தங்கத்தின் மீதான கவனத்தை குறைத்துள்ளது.
இருப்பினும், இந்த நிலைமை சீரான பிறகு தங்கத்தின் விலை கணிசமாக உயரக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சூழலில், சென்னையில் நேற்று (ஜூன் 24) ஒரு கிராம் தங்கம் ரூ.13,350 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,06,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.210 குறைந்து ரூ.13,140 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,680 குறைந்து ரூ.1,05,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியை மக்கள் பயன்படுத்தி தங்க நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.
இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,30,000 ஆகவும் விற்பனையாகிறது.


