தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் மட்டும் 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். குற்றப் பின்னணி கொண்ட 36,740 பேர் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் சிறப்பு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் மீது இ.கா.ப. திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடந்த மே 28 முதல் ஜூன் 10 வரை நடைபெற்ற சோதனைகளில், 36,740 பேர் சோதனை செய்யப்பட்டதில், 1,328 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை 2,939 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 231 கிலோ கஞ்சா, 4,073 மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்டமின், 362.5 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 17 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாலியல் பாதுகாப்புச் சட்டம் (POCSO) தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கு மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.