முன்னாள் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது சகோதரர்களான கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில் 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024-25 நிதியாண்டில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இதில், 150க்கும் மேற்பட்டோர் தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து பணி பெற்றதற்கான விவரங்கள் அமலாக்கத்துறைக்கு கிடைத்துள்ளன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி கடிதம் அனுப்பியது.
அமலாக்கத்துறையிடம் இருந்து 232 பக்க ஆவணங்களுடன் தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யாததை எதிர்த்து அதிமுக எம்பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி நேரு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர இருந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறையினர் அளித்த கடிதங்களின் அடிப்படையில், நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் எனக்கூறி, இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறினார்.