சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இணையத்தில் பரவும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
"தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் பரவி வருகின்றன. இதற்கு பதில் சொல்லாவிட்டால், அவை உண்மையாகிவிடும். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், நான் அரசியலைத் தாண்டி நண்பர் என்ற முறையில் ஸ்டாலினை சந்தித்தேன். இது நட்பின் அடிப்படையில் அமைந்த சந்திப்பு" என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் குறித்து பேசிய ரஜினிகாந்த், "விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விஜய்க்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடக்கூடாது. விஜய் வென்றது எனக்கு மகிழ்ச்சியே. விஜய் தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். இது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒன்றாக இருக்கிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "நான் அரசியலில் இல்லாத நிலையில், முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்குமோ என்னவோ? ஆனால், கிடைப்பது கிடைக்காமல் போகாது, கிடைக்காமல் இருப்பது கிடைக்காது" என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.