மது அருந்தும் பழக்கத்தால் இன்று பல குடும்பங்கள் சிதைந்து சின்னாபின்னமாகின்றன. மது நம் உடல் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விரிவாகக் காண்போம்.
மது அருந்தும்போது, சிறிதளவு வயிற்றாலும், பெரும்பாலான அளவு சிறுகுடலாலும் உறிஞ்சப்படுகிறது. இதனால்தான், உணவு உண்ட பிறகு மது அருந்தினால் போதை மெதுவாக ஏறுகிறது. சாராயத்தின் செறிவுக்கேற்ப உறிஞ்சப்படும் வேகம் மாறுபடும். உதாரணமாக, பீர் போன்றவற்றை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவை அதிவேகமாக உறிஞ்சப்படுகின்றன.
இவ்வாறு உறிஞ்சப்பட்ட மது உடனடியாக இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது. அதே சமயம், நம் உடல் அதனை வெளியேற்ற கடுமையாகப் போராடும். இந்த முயற்சியில், சிறுநீரகம் ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரலும் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக் காற்றில் வெளியேற்றும்.
மதுவை வெளியேற்றும் இந்த போராட்டத்தின்போது, கல்லீரல் பெரும்பாலான ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை உறுப்புகள் மதுவை வெளியேற்றப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் அதைவிட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால், உடல் உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அந்த உறுப்புகள் விரைவில் வலுவிழந்து செயலிழந்து போகின்றன.
எனவே, மது குடிப்பது ஒருவகையில் மெதுவான தற்கொலை முயற்சி போன்றது என மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.