“மாற்றத்தைத் தருகிறேன்” என்று கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க அரசு, ஒரு மாத காலத்திலேயே மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 6 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை நீடிக்கும் மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவிலும் சாலைகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தின் தலைநகரிலும் மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன் என்ற முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார். மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ, தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார். ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மாயம், மின்வாரியப் பணியாளர்கள் சதி என தினமும் ஒரு கதையை ஊடகங்களிடம் கூறி மக்களை ஏமாற்றுகிறார்” என விமர்சித்துள்ளார்.
மேலும், “ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக மின்சாரம் போக வேண்டும். விட்டுவிட்டு போவது எப்படி? அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுற்றுகிறார். ஹார்ட் டிஸ்க் திருட்டுக்கும் கரண்ட் கட்டுக்கும் என்ன சம்பந்தம்? மின்வாரியப் பணியாளர்கள் மீது பழி போடுவது தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும். கரண்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது? த.வெ.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம், மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும் அவலம் தான்!” என்று சாடியுள்ளார்.
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பதுதான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது. 2021ல் 16,481 மெகாவாட் ஆக இருந்த மின் தேவை, 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இந்தியாவிலேயே மிகக் குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அமைச்சரே பாராட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின்மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்! ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே பத்திரிக்கையாளர் சந்திப்பை பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொதுமக்கள் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.