சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தமிழக சட்டசபை அதன் மாண்பை இழந்து சினிமா அரங்கம் போல் காட்சியளிப்பதாக கடுமையாக விமர்சித்தார். 'வரலாற்றுச் சிறப்புமிக்க நம் சட்டசபை, நம் முன்னோர்கள் அலங்கரித்த மன்றம், இன்றைக்கு சினிமாவில் சட்டசபை இருப்பது போல் காட்சியளிக்கிறது. சட்டசபையின் விதிமுறைகள் மாறிவிட்டன' என்று அவர் குறிப்பிட்டார்.
கோவை கல்லூரி மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கேள்வி எழுப்ப முயன்றபோது, திங்கட்கிழமை விளக்கம் அளிப்பதாக அரசு கூறியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மாணவர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல் என்றும், கடந்த ஐந்தாண்டுகளில் இருந்ததை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த போதைப்பொருள் புழக்கமே சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்றும், இதன் காரணமாகவே கல்லூரி மாணவர் கொலை நடந்ததா என விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவெக அரசு போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தவெக அரசின் 100 நாள் சாதனையாக, 'ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே' அமைந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கிண்டலடித்தார். அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காவிரி விவகாரத்தில் மக்கள் சொல்வதையாவது முதல்வர் கேட்க வேண்டும் என்றும், காவிரி பிரச்சனை பற்றி முதல்வருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். அதிமுக மற்றும் திமுக மட்டுமே காவிரிக்காக குரல் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
தவெக ஆட்சிக்கு வர துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியும் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இது ஒரு புதிய திட்டம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
'வெற்றி, வெற்றி' என ஒட்டுமொத்தமாக மக்களை ஏமாற்றியுள்ளதாகவும், ஒரு புதிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
